தெய்வம் வளர்த்ததமிழ் தென்பொதிகை தோன்றுதமிழ்
உய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் - மெய்யுணர்வில்
தன்னே ரிலாததமிழ் துங்கமுடன் மின்னிணையம்
மின்னவந்த மேன்மைத் தமிழ்.

பழுதை நீக்க வந்த பழந்தை - தமிழக முதலமைச்சருக்கு நன்றி


பழுதை நீக்க வந்த பழந்தை

Big Image

அப்பா! இம்மாத தெய்வமுரசு பணிகள் எல்லாம் முடிந்தன என்று ஓய்வெடுக்கத் தொலைக்காட்சி முன் உட்கார்ந்தேன்.

தொலைக் காட்சியில் செய்திகள் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருந்தன. திடீரென உற்சாகத்தோடு துள்ளிக் குதிக்கும் படி ஒரு செய்தி படிக்கப்பட்டது. அது இது தான்:

இன்று (29-1-2008) சட்ட மன்றத்தில் தை முதல் நாளை இனி தமிழ்ப் புத்தாண்டு தினமாகக் கொள்வதென சட்ட முன்னாக்கம் மன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது.

ஆ! இதைவிட மகிழ்ச்சியான செய்தி வேறென்ன இருக்க முடியும்? இது தமிழறிஞர்களின் எத்தனை நாள் கனவு? இது தமிழ் மூதாதையர்களின் எத்தனை நாள் தினவு!

காலையில் எழுந்து எந்த வானொலியைத் திருப்பினாலும் சில தொலைக்காட்சிகளைத் திருப்பினாலும் கட்டைக் குரலில் சக ஆண்டு என்று ஆண்டுப் பெயரும், மாதத்தின் பெயரும், நாளின் பெயரும் கூறப்படும். அதில் கூறப்படும் ஆண்டின் பெயரும் மாதத்தின் பெயரும் கேட்கும் எந்தத் தமிழனிடமும் ஒரு அசைவையும் உண்டு பண்ணாது. காரணம் அவை அவனுக்கு அயலான மொழியில் இருக்கும். கிழமை ஒன்று தான் அவனுக்குப் புரிவதாக இருக்கும். அதிலும் ஒரு தொலைக்காட்சியில் ஒருவர் அந்த ஆண்டைப் பயமுறுத்துவது போல எழுத்தெழுத்தாக உச்சரிக்கும் போது அதற்குள் அந்த ஆண்டே ஓடிவிடும் போலத் தோன்றி அச்சத்தை விளைவிக்கும்.

ஆமாம், இந்த சக ஆண்டு என்பது என்ன? யாருக்குத் தெரியும் என்கிறீர்களா? நானே சொல்லி விடுகிறேன்.

விக்கிரமாதித்தன் ஆட்சிக்கு வந்த ஆண்டு தான் சக ஆண்டு. விக்கிர மாதித்தன் தமிழனா? இல்லை. அவன் ஒர் சாளுக்கிய மன்னன். அப்புறம் ஏன் அவன் பெயரில் தமிழன் தன் ஆண்டுக் கணக்கை எடுத்துக் கொள்ள வேண்டும்? ஏதாவது வேண்டுதலா?

கிறிஸ்து ஆண்டை ஆங்கிலேயர்கள் நம்மீது திணிப்பதற்கு முன் இந்தியாவின் நிலைமை என்ன? எந்தெந்த அரசன் ஆட்சிக்கு வருகிறானோ அந்த நாள் முதல் ஆண்டைக் கணக்கில் எடுத்துக் கல்வெட்டில் பொறிப்பார்கள். இராசராசன் ஆட்சி பீடத்தில் ஏறுகின்றான் என்றால் அந்த நாளிலிருந்து அவனது ஆண்டுக் கணக்குத் தெடங்கும். கல்வெட்டுக்களின் காலக் கணக்கிற்கு அது தான் அடிப்படை. எனவே இன்ன அரசனது ஆட்சியாண்டு என்றே கல்வெட்டு தெடங்கும். ஆகவே கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் ஆண்டு என்பது வேறு, யாண்டு என்பது வேறு என்று தெளிவுபடுத்துகிறார்கள். ஓர் ஆண்டுக்கு பன்னிரண்டு மாதங்கள் என்பது வரை சரி. ஆனால் கல்வெட்டு அந்த ஆண்டு எங்கே இருந்து தெடங்குகிறது என்று கவலைப்படுவதில்லை. எனவே, எந்த அரசனது ஆட்சியாண்டு தெடக்கம் என்பதைப் பற்றித் தான் அது பேசும்.

ஓர் உதாரணத்திற்கு ஓர் அரசன் ஏதோ ஓர் ஆண்டில் ஏதோ ஒரு மாதத்தில் ஏதோ ஒரு நாளில் ஆட்சி ஏறினான் என்றால் அவனது ஆட்சியாண்டு அந்த நாளிலிருந்து கணக்கெடுத்துக் கொள்ளப்படும். அந்த ஆட்சியாண்டிலிருந்து இத்தனையாவது ஆட்சியாண்டுகள் கழிந்து ஒரு குறிப்பிட்ட அறம் அல்லது செய்கை செய்யப்பட்டது என்று கல்வெட்டு குறிப்பிடும். ஆகவே அரசனுக்கு அரசன் ஆட்சியாண்டு மாறும். அதாவது தற்காலத்தில் ஏப்ரல் முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரை ஒரு நிதியாண்டு என்று கணக்கெடுக்கப் படுகிறதே அது போல ஒவ்வொரு ஆட்சியாண்டும். இது ஒவ்வொரு அரசனுக்கு ஒவ்வொரு ஆட்சியாண்டாக இருக்கும். இந்த நிலையில் தமிழ்நாட்டில் அயலவர் ஆட்சி வந்தது. அதனுடன் வடமொழிப் பிராம்மணர்கள் தமிழகத்தின் பலவேறு ஊர்களில் அயலின மன்னர்களால் குடியேற்றப் பட்டனர் என்று வரலாறு கூறுகிறது. பல சதுர் வேதி மங்கலங்கள் தமிழகத்தில் முளைத்தன. இவர்கள் தமிழகத்து அரசர்களின் ஆதரவைத் தமக்கு ஆதரவான சாத்திரங்கள் காட்டி பெற்றனர். அவர்களுக்கு இறையிலியாக சிற்றூர்கள் வழங்கப் பெற்ற போது வடக்கிலிருந்து வந்தவர்கள் ஆட்சியாண்டை வடமொழியில் உள்ள சக ஆண்டுக்கு மாற்றிக் கல்வெட்டிக் கொண்டார்கள்.

இது தான் சக ஆண்டு தமிழகத்துள் நுழைந்த கதை. அதன்பின் தொடர்ந்து பல்லவரும், இசுலாமியரும், நாயக்கர்களும், மராட்டியர்களும், பிரஞ்சுக் காரர்களும், ஆங்கிலேயர்களும் என அயலவர் ஆட்சியே நடந்ததால் சக ஆண்டே நிலைத்துப் போயிற்று.

ஒரு கேள்வி: பல ஆண்டுகளாக இருந்து வரும் ஆண்டை திடீரென மாற்றலாமா?

ஒவ்வொரு அரசனும் வரும் போது ஆட்சியாண்டு மாறிக் கொண்டே வந்திருக்கிறது என்று கல்வெட்டுகள் சான்று கூறுகின்றன. அப்படியானால் தமிழரசு ஒன்று தமிழாண்டுக்கு மீண்டும் மாற்றுவதில் என்ன தவறு இருக்க முடியும்?

விக்கிரமாதித்தனுக்கு முன் மன்னர்களே இல்லையா? அவனோடு தான் இந்த உலகம் பிறந்ததா? இல்லையே. அவன் பிறந்த பின் அவனை ஒட்டிய ஒரு புதிய ஆண்டுக் கணக்குக்கு மாறலாம் என்றால் அவனோடு எந்தத் தொடர்பும் இல்லாத தமிழினம் தன் இனத்தோடு தொடர்புடைய ஆண்டுக் கணக்கிற்கு மாறுவதில் என்ன தவறு இருக்க இயலும்?

சக ஆண்டைத் தமிழகத்தில் நுழைத்தவர்கள் மாதங்களுக்கும் தமிழ்ப் பெயர்களை நுழைத்தார்கள். தமிழர்களின் ஆண்டு வரலாற்றில் வாராத காலத்தில் இப்போதைய சித்திரையில் இருந்து தொடங்கவில்லையாம். ஆவணி மாதத்தில் இருந்து தொடங்கியதாக தொல்காப்பிய உரையில் நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார்.


மேலும்...

 

நிகழ்வுகள்

Image 18-ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா

மூன்று நாள் விழா! 2-1-2009, வெள்ளி முதல் 4-1-2009, ஞாயிறு வரை

சைவசித்தாந்தச் செந்நெறி விளக்கும் ஆறாம் தந்திரம் முற்றோதல்.

மேலும் அறிய...

Image 18th year - Thirumanthiram Recital (3rd Round)

A Three Day Program :: 2nd - 4th Jan 2009

Full Recitation of 6th Thanthiram - in Nine sittings.

To Know More...

Image

தமிழறிஞர்கள் யாவரும் கொண்ட முடிவை ஏற்று தமிழக முதலமைச்சர் அறிவித்த வேகத்தில் இடையீடு விழாமல் அரசாணைக்கு ஏற்பாடு செய்தமைக்கு எட்டு கோடி தமிழர்களும் அவரை விட்டுக் கொடுக்காமல் திசை நோக்கி வணங்குவதே கடன்!

மேலும் அறிய...

 

Image17 ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா ஒளிக்காட்சிகள்.

முதல் நாள்

இரண்டாம் நாள்

மூன்றாம் நாள்

 

படைப்புகள்

Imageகுற்றக்கழுவாய் (பிரதோஷ) வழிபாடு:
இறைவனை மறவாது வழிபட வேண்டும் என்பது பொது நியதி. எந்த வழிபாடானாலும் அது அறிவோடு ஆற்றப்பட வேண்டும். சிறப்புமிக்க பிரதோஷ வழிபாட்டை ஏன் செய்ய வேண்டும் ? எப்படி செய்ய வேண்டும் ? அப்படிச் செய்வதன் பொருள் என்ன? என்பதையெல்லாம் இந்நூலில் "உள்ளுறை" என்ற பகுதியிலும் "சிறப்பு" என்ற தலைப்பில் அதன் வழிபாட்டு முறைகளும் கூறப்பட்டுயுள்ளது.

மேலும் அறிய...

Imageவண்டமிழில் வாழ்வியல் சடங்குகள் :

நமது நாட்டில் குழந்தையைத் "தொட்டில் இடுதல்" ஆகிய தொடக்கம் முதல் "திருவடிப்பேறு" ஆகிய அடக்கம் வரை எத்தனையோ சடங்குகள் உள்ளன.

சடங்கு என்றால் வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளை ஓர் ஓழுங்குமுறைக்குள் கொண்டு வர தமிழ்ச் சான்றோர்களால் யாக்கப்பட்ட முறையாகும். அவை மதிப்பு பெறுவது அவரவர் தாய் மொழியில் அவை ஆற்றப்படும்போது என்பது தெளிவு. ஆகவே தமிழர்கள் தமிழ் மொழிலேயே வாழ்வியல் சடங்குகளை ஆற்றுவதே இன்றைய தேவை. அந்தத் தேவையை நிறைவு செய்ய எழுந்ததே இந்நூல்.

மேலும் அறிய...

Imageதிருமுருகாற்றுப் படை:
திருமுருகாற்றுப்படை ஒரு தீவிர பத்தனை முருகப்பெருமானிடம் ஆற்றுப்படுத்துவது. திருமுருகாற்றுப் படைக்குச் சான்றோர் சிலர் உரை கண்டிருக்கின்றனர். ஆனால் இந்நூலாசிரியர் தமிழ்ச்சதுரர் மு.பெ. சத்தியவேல் முருகனார் நன்னூலுக்குச் சிவஞான முனிவர் விருத்தியுரை கண்டது போல் ஒரு விருத்தியுரை கண்டிருக்கிறார்.

மேலும் அறிய...